ஜெ. வழக்கில் அரசு உதவி வக்கீல் வாதாட மறுப்பு! பவானிசிங்கை போல சம்பளம் கேட்கிறார்
பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி மறுத்துவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கும், உதவி வழக்கறிஞராக முருகேஷ் மரடியும் ஆஜராகிவந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், சம்பளம் குறைவாக இருப்பதால், தன்னால் வாதிட முடியாது என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறி, ராஜினாமா செய்ததாகவும், அதையடுத்து, அவரை சமாதானம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ராஜினாமாவை பவானி சிங் மறுத்து, விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி, ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தன்னால் ஆஜராக இயலாது என, பவானி சிங்கிடம், நேற்று முன்தினம் நேரடியாகக் கூறியுள்ளார். இதனால், நேற்றைய விசாரணையின்போது, மரடி ஆஜராகவில்லை.
இதுகுறித்து பவானி சிங் கூறுகையில் "வழக்கு விசாரணைக்கு, நான் இனி வர மாட்டேன் என்று கூறிவிட்டு, மரடி சென்று விட்டார். இதில் நான் என்ன செய்ய முடியும். அரசு உதவி வழக்கறிஞராக வேறு யாரையாவது நியமனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார்.
பவானி சிங்கிற்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல தனக்கும் அதிகரிக்க வேண்டும் என்று கூறியே மரடி ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications