சிறப்பு கோர்ட்டிலிருந்த சொத்துக்குவிப்பு வழக்கு ஆவணங்கள் ஜெ. தரப்பிடம் ஒப்படைப்பு
பெங்களூரு: சொத்து குவிப்பு ஆவணங்கள் வழங்கக் கோரி ஜெயலலிதா சார்பில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவை ஏற்று நேற்றுடன் அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரணை நடத்திய பெங்களூர் தனிநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும்,, மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 17ம் தேதி நான்கு பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம், டிசம்பர் 18ம் தேதிக்குள் தனிநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்பட குற்றவாளிகள் சார்பில் வக்கீல்கள் பி.வி.செல்வ குமார், மூர்த்திராவ் ஆகியோர் அக்டோபர் 18ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதில் தனது கட்சிக்காரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், டிசம்பர் 18ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆகவே இந்நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள், அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சிகள், வக்கீல்கள் வாதம் உள்பட அனைத்து விவரங்கள் கொண்ட ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதையேற்று கொண்ட நீதிபதி, ஆவணங்களை நகல் எடுத்து கொடுக்கும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
கடந்த ஒன்றரை மாதமாக ஆவணங்கள் நகல் எடுக்கும் பணி நடந்தது. ஏற்கனவே 80 சதவீத ஆவணங்களை வக்கீல்கள் கருப்புசாமி, முத்துகுமார் ஆகியோர் நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹாவிடம் பெற்று சென்றனர். மீதியுள்ள 20 சதவீத ஆவணங்கள் நேற்று வழங்கப்பட்டது. தனி நீதிமன்ற சிறப்பு
நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சோமராஜு, முறைப்படி குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் பரணிகுமார் மற்றும் தனஞ்ஜெயன் ஆகியோரிடம் இவற்றை ஒப்படைத்தார். இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications