ஜெ. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதியை கோபமடைய செய்த அதிமுகவினர்!
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்ததால், ஹைகோர்ட் மற்றும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை அருகே அதிமுகவினர் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனிடையே ஜாமீன் வழக்கு விசாரணையின்போது, கோர்ட் வளாகத்தில் கூச்சலிட்ட அதிமுகவினரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை இன்று வந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் மத்திய சிறைச்சாலை அருகே குவியலாம் என்று உளவுத்துறை தகவல்கள் பெங்களூர் போலீசாருக்கு கிடைத்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணிவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலை மற்றும் ஹைகோர்ட் சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இருப்பினும், இன்று காலை முதல் கட்சி கரைவேட்டி, கட்சி கொடிகளுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சிறை அருகே குவிந்தனர். இதையடுத்து சிறை வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு இணை போலீஸ் கமிஷனர் தலைமையில், 4 துணை போலீஸ் கமிஷனர்கள், 12 உதவி போலீஸ் கமிஷனர்கள், 34 இன்ஸ்பெக்டர்கள், 60 சப்-இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் 15 பட்டாலியன், ஆயுதப்படையின் 15 பட்டாலியன் போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1500க்கும் மேற்பட்ட போலீசார் சிறை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
ஜாமீன் கிடைத்தால் கொண்டாட்டங்களில் ஈடுபடவும், ஜாமீன் கிடைக்காவிட்டால் வன்முறையில் ஈடுபடவும் அதிமுகவினர் திட்டமிட்டதாக போலீசார் கருதியதால் அதை தடுக்க இத்தனை போலீசார் குவிக்கப்பட்டனர். சிறை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் சிலரும் குவிந்திருந்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ஜாமீன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வெளியே நின்ற அதிமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணை நீதிபதியான சந்திரசேகரய்யா, கடும் கோபமடைந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே நிற்பவர்கள் நீதிமன்ற ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications