ஜெ., உட்பட 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்; விடுதலை செய்த கர்நாடகா தீர்ப்புக்கு உடனே தடை இல்லை!
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உடனே தடை விதிக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் ஜெயலலிதா உட்பட 4 பேரும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அப்பீல் மனுக்கள் மீது 8 வாரங்களுக்குப் பின் விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது கடந்த 18 வருடங்களாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பளித்தது. அனைவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா தீர்ப்பளித்தார்.

ஜெயலலிதா விடுதலை
குன்காவின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, கடந்த மே 11ம் தேதி தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

தவறான கணக்கு
இந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் சொத்து கணக்குகள் விவரங்கள், வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண செலவு விவரங்கள் தவறாக கணக்கிடப்பட்டுள்ளன என கூறப்பட்டிருந்தது.

அன்பழகன் மனு
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் நீக்கப்பட்டுள்ள லெக்ஸ் பிராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவையும் தி.மு.க தாக்கல் செய்தது.

அரசு வக்கீல் ஆச்சார்யா
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது கர்நாடக அரசு சார்பில் வாதாட சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இதற்கான அரசாணையும் கர்நாடக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால், ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜெ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
அப்போது, ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. கர்நாடகா அரசு, திமுக தரப்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் எதிர்தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்பதால் தடை விதிக்க இயலாது என நீதிபதிகள் கூறினர். இதன் பின்னர் ஜெயலலிதா உட்பட 4 பேரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

6 நிறுவனங்களுக்கும்..
இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராப்பர்ட்டி உள்ளிட்ட 6 நிறுவனங்களும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சு.சுவாமி மனு ஏற்பு
மேலும் இந்த வழக்கில் தம்மையும் ஒருதரப்பாக சேர்க்கக் கோரி பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.

3 வாரத்தில் பதில்..
அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்யும் பதில் மனுக்கள் மீது கர்நாடகா அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

8 வாரத்துக்குப் பின் விசாரணை
இதனைத் தொடர்ந்து 8 வார காலத்துக்குப் பின்னர் ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications