ஜெயலலிதாவுக்கு வயிற்று வலி: சிறைச்சாலை மருத்துவர்கள் பரிசோதனை
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள மிக முக்கிய நபர்களுக்கான செல்லில், ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்க சிறைச்சாலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று காலையில் இட்லி, சாம்பார், சட்னி சாப்பிட்ட ஜெயலலிதா, மதியம் ரொட்டி, புரூட் சலாட் போன்றவற்றை சாப்பிட்டார். இந்நிலையில் நேற்றிரவு ஜெயலலிதாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனை டாக்டர்கள், ஜெயலலிதாவை பரிசோதனை செய்தனர்.

உணவு மாறுபாடு காரணமாக ஏற்பட்ட சாதாரண வயிற்று வலிதான் என்பதை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு வயிற்று வலிக்கு உரிய மருந்துகளை கொடுத்ததை தொடர்ந்து ஜெயலலிதா தற்போது நலமாக இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேவைப்பட்டால் மட்டுமே வெளியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படும் என்றும், சாதாரண பிரச்சினைகளுக்கு சிறைச்சாலை மருத்துவர்களே சிகிச்சை அளிப்பார்கள் என்றும் சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இன்று காலை 5 மணிக்கு ஜெயலலிதா விழித்துள்ளார். சிறிது வாக்கிங் சென்ற பிறகு, டீ குடித்துவிட்டு, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளை வாசித்துள்ளார். காலை 8 மணியளவில், சிற்றுண்டி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் மற்றும் வடையை ஜெயலலிதா சாப்பிட்டுள்ளார்.
தற்போது ஜெயலலிதா நலமாக உள்ளதாகவும், பக்கத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் ஜெயலலிதாவை சந்திக்கவும், அவருடன் பேசவும் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஆசைப்படுபவர்களிடம் ஜெயலலிதா உரையாடி அவர்கள் குறைகளை கேட்டறிந்தாராம்.












Click it and Unblock the Notifications