சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய கார்.. போலீசார் தீவிர விசாரணை
ஜெயலலிதா, அந்த காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அந்த காரை சிறிது காலத்திற்கு பின் மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
சித்தூர்: சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதா பயன்படுத்திய பழைய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம், கே.வி.பி.புரம் மண்டலம், பகுதியில் உள்ளது ஆரோம் கிராமம். அக்கிராமத்தில் தமிழக பதிவு எண் கொண்ட கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்து.
இதுகுறித்து நேற்று முன்தினம் சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், காரை திறந்து உள்ளே இருந்த ஆவணங்களை சரி பார்த்தனர்.
அந்த காரின் பதிவு எண்ணான, டி.என்.07 வி-1948 என்பதை வைத்து விசாரணை நடத்தியபோது, அது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தத கார் என்பது தெரியவந்தது.
ஆனால் அவர் கடைசிவரை அந்த காரை பயன்படுத்தவில்லை. ஜெயலலிதா, அந்த காரை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அந்த காரை சிறிது காலத்திற்கு பின் மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். கார் பதிவு எண்ணை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் அம்பலமானது.
இருப்பினும், காரில் கிடைத்த ஆவணங்கள் உண்மையானது தானா? என்பது குறித்து கே.வி.பி.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.