ஜெ வழக்கு தீர்ப்பு: 15 மாவட்ட தமிழக எஸ்.பிக்களுடன் பெங்களூர் போலீஸ் கமிஷ்னர் ஆலோசனை!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை கேட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வரும் நாளன்று நகரில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார்.
ஜெயலலிதா வருகையையொட்டி பெங்களூர் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
15 மாவட்ட எஸ்.பிக்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் இருந்து பெங்களூருக்குள் வரும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்ய எல்லையோரத்திலுள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 15 மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களை தொடர்பு கொண்டு, அங்கிருந்து கிளம்பும் வாகனங்களை தீவிர தணிக்கை நடத்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
எல்லையில் வாகனத்தை நிறுத்த திட்டம்
தமிழக போலீசாரும், கர்நாடக காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தேவையேற்பட்டால் பெங்களூர் எல்லையிலேயே தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில், சிசிடிவி ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு தீர்ப்பு நாளில் கோர்ட்டை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். 2 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். தேவையேற்பட்டால் அதிகபட்சமாக 5 ஆயிரம் போலீசார்வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
5 கம்பெனி அதிரடி படை குவிப்பு
போலீசார் மட்டுமின்றி அதிரடி போலீஸ் படையின் (RPF) 5 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். கலவரத்தை ஒடுக்கும் வஜ்ரா வகை வாகனங்கள் கோர்ட் வளாகத்தை சுற்றி நிறுத்தப்படும். இவ்வாறு கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்தார். இதனிடையே, தீர்ப்பு நாளில் பெங்களூரில் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட்டுக்கு பாதுகாப்பு?
தீர்ப்பு வெளியாகும், சனிக்கிழமை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில், மாலை மற்றும் இரவில் இரு சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் பற்றாக்குறை இருப்பதால், ஜெயலலிதா தீர்ப்பு தேதியை தள்ளி வைக்குமாறு எம்.என்.ரெட்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதியை கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
சவாலை சந்திக்க தயார்!
இதுகுறித்து கமிஷனரிடம் கேட்டதற்கு, அதுபோன்ற எந்த ஒரு கோரிக்கையும், காவல்துறை சார்பில் கோர்ட்டில் முன் வைக்கவில்லை, எந்த சவாலையும் பெங்களூர் போலீசார் சமாளிப்பார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே தமிழக முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கர்நாடக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர்களை நேரில் சந்தித்து போலீஸ் கமிஷனர் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.