சொத்துக் குவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்கும் ஜெ.
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்க ஜெயலலிதா தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கைவிடுத்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பெங்களூர் தனிக் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
நீதிபதி குன்ஹா அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதி குமாரசாமி இந்த அப்பீல் மனுவை விசாரித்து, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசும் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். ஜெயலலிதா தரப்பினர் பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணை வருகிற 23ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அன்று முதல் தினசரி விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரம் கழித்து எடுத்துக்கொள்ளுமாறு ஜெ. தரப்பு இன்று கோரிக்கை முன் வைத்தது. இந்த கோரிக்கையை மனுவாக சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் அளிக்குமாறு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications