ஜெ. அப்பீல் முடிவில் பிளவுபட்ட கர்நாடக அமைச்சரவை! முடிவு எடுக்காமல் இழுபறி!!
பெங்களூரு: கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு அளித்த தண்டனையை கர்நாடக ஹைகோர்ட் கடந்த 11ம் தேதி ரத்து செய்து, அவர்களை விடுவித்தது.

இந்த தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா மற்றும் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோர், கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சரவையை கூட்டி விவாதித்து முடிவெடுக்க உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை கூடுவதாக இருந்த நிலையில், திடீரென கேபினெட் ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பிறகு, மேல்முறையீடு பற்றி முடிவெடுக்கலாம் என்று சித்தராமையாவுக்கு மேலிடம் அறிவுறுத்தியதால் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூடியது. இரவு 7.45 மணிவரை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவையில் 25வது விவாதப்பொருளாக ஜெயலலிதா வழக்கு இருந்தது. எனவே, இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற ஆர்வத்தில், பத்திரிகையாளர்கள் தலைமைச் செயலகத்தில் குவிந்திருந்தனர்.
அதேநேரம், கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், கேபினெட் விஷயங்களை அமைச்சர்களில் யாருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இருப்பினும், தலைமைச் செயலக அலுவலர்கள் வட்டாரத் தகவல்படி, ஜெயலலிதா விவகாரத்தில் அமைச்சரவை இறுதி முடிவை எடுக்கவில்லை என்று தெரியவந்தது. இதுகுறித்து அமைச்சக வட்டாரத்திடம் கேட்டபோது "தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரிடம் சில சந்தேகங்களை கேட்க அமைச்சரவை முயன்றது. அவர் ஊரில் இல்லாததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே ஜெயலலிதா வழக்கு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அவர் வந்த பிறகு முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தது.
ஆனால் தலைமைச் செயலக வட்டாரங்களோ வேறுமாதிரி கூறுகின்றன. அமைச்சக வட்டாரம் கூறுவது வெறும் கண் துடைப்பு வார்த்தைகள்தான். அமைச்சரவையில் ஜெயலலிதா விவகாரம் சர்ச்சைக்கு வருவது தெரிந்த பிறகும், அரசு தலைமை வழக்கறிஞர் வெளியூர் சென்றிருக்க வாய்ப்பில்லை. அப்படியே சென்றாலும் தொலைபேசியில் அமைச்சர் தனது சந்தேகத்தை கேட்டிருக்க முடியும்.
ஆனால், அமைச்சர்களில் ஒருசிலர் அப்பீல் வேண்டாம் என்றும், சிலர் அப்பீல் செய்யலாம் என்றும் வெவ்வேறு கருத்துக்களை கூறியதால்தான் முடிவு எடுக்கப்படவில்லை என்கின்றன அந்த வட்டாரங்கள். குழப்பத்தில் இருந்த அமைச்சரவை, முதல்வர் சித்தராமையாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், சித்தராமையாவோ, உடனடியாக முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் தலைமைச் செயலகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications