ஜெ. மேல்முறையீட்டு மனு: கர்நாடக ஹைகோர்ட்டில் நாகேஸ்வரராவ் வாதம்
பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 9வது நாளாக நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மேல்முறையீடு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
இன்று வழக்கின் 9வது நாள் வாதம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் முதலில் வழக்கறிஞர் குமார் ஆஜராகினார். பிறகு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதா சார்பில் ஆஜராகிவருகிறார். நாகேஸ்வரராவ், இன்று 4வது நாளாக வாதம் செய்தார்.
அப்போது அவர், ''ஜெயலலிதா மீதான வழக்கில் கட்டடம், நிலம் குறித்து தவறாக மதிப்பிடப் பட்டுள்ளது. போயஸ் தோட்டம், திராட்சைத்தோட்டத்தின் மதிப்பை தவறாக கணக்கிட்டுள்ளனர்'' என்று வாதத்தில் குறிப்பிட்டார்.