> யேசு, நபிகள், மகாத்மா மீது கூடத் தான் குற்றச்சாட்டு எழுந்தது: புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர்
டெல்லி: யேசு நாதர், நபிகள் நாயகம், மகாத்மா காந்தி ஆகியோர் கூட குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளனர் என்று பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் பணிபுரியும் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர் வல்சன் தம்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பிரபல புனித ஸ்டீபன் கல்லூரியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்யும் மாணவி ஒருவர் பேராசிரியர் சதீஷ் குமார் மீது போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சதீஷ் தன்னை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது எதிர்காலம் பாதிக்கும் என்று அஞ்சி தான் இத்தனை ஆண்டுகளாக சதீஷ் குமார் மீது புகார் அளிக்கவில்லை என்று அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சதீஷ் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதற்கிடையே சதீஷ் கல்லூரியின் நிதி நிர்வாக அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கல்லூரி முதல்வர் வல்சன் தம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தம்பு கூறுகையில்,
அந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருந்தால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் அது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. மகாத்மா காந்தி, யேசு நாதர், நபிகள் நாயகம் மீது கூடத் தான் புகார் எழுந்தது. அனைத்து சீர்திருத்தவாதிகள் மீதும் புகார் உள்ளது என்றார்.