கருப்புப் பண விவகாரத்தில் ப. சிதம்பரம் பாதையை பின்பற்றுகிறது மோடி அரசு: ராம்ஜெத்மலானி சாடல்!
டெல்லி: கருப்புப் பண விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் பாதையைத்தான் தற்போதைய மோடி அரசும் பின்பற்றுகிறது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானாலும் கருப்புப் பண விவகாரத்தில் நேர்மையாக, முழு ஈடுபட்டுடன் செயல்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களிடம் விசாரணையைத் தொடங்கி கைது செய்ய வேண்டும்.

கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் மீது விசாரணையை உடனே தொடங்க வேண்டும். வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் பெயரை ஜெர்மனி லஞ்சம் கொடுத்து பெற்றுள்ளது. ஊடகங்களிலும் ஜெர்மனி நிதி அமைச்சர் வெளிப்படையாகவே, கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பட்டியலை எந்த ஒரு நிபந்தனையுமின்றி வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று அறிவித்தார்.
ஆனால் அந்தப் பட்டியலைப் பெற நாம் எதுவுமே செய்யவில்லை. இந்த கருப்புப் பணம் தொடர்பான விசாரணையை முழுமையாக சீர்குலைத்தவர் ப. சிதம்பரம்தான். அவரது வழியைத்தான் தற்போதைய நிதி அமைச்சர் ஜேட்லியும் பின்பற்றுகிறார். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காரணமே மத்திய நிதி அமைச்சர் ஜேட்லிதான்.
பிரதமர் மோடி நினைத்தால் நிச்சயமாக கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியும். கருப்புப் பணத்தைக் கொண்டு வர வேண்டும் என்று போராடுகிற நான் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன். அப்படியானால் பாஜகவில் எப்படியானவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.












Click it and Unblock the Notifications