ஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் பசு கடத்தல் புகாரின்பேரில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட்டில் கும்பல் கொலை சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்த மாநிலத்தில் நடைபெற்ற தப்ரேஸ் அன்சாரி கும்பல் கொலை வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மற்றொரு கும்பல் கொலை சம்பவம் அங்கு நடந்துள்ளது.

ஜல்தாண்டா சுவாரி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. அங்கிருந்து மாடுகள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தெரிந்தவுடன் கிராமவாசிகள் ஒன்றிணைந்து பசுமாடுடன் சென்ற 3 இளைஞர்களை வழிமறித்து கடுமையாக அடிக்கத் தொடங்கினர்.
தகவல் கிடைத்ததும், கர்ரா காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து, காயமடைந்த மூன்று இளைஞர்களையும் முதலுதவிக்காக கர்ராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் கலான்டஸ் பர்லா என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை என்றும், இந்த விவகாரம் விசாரணை நிலையில் உள்ளது என்றும் போலீஸ் டி.ஐ.ஜி வேணுகோபால் ஹோம்கர் கூறினார். யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், ஒரு சில நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் கும்பல் வன்முறையில் குறைந்தது, 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications