ஜார்க்கண்ட் பகீர்..போலீஸ் உடற்தகுதித் தேர்வில் மயங்கி விழுந்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து சுருண்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரமான வெயிலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி முதல் உடற் தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு பல்வேறு மையங்களில் ஆகஸ்ட் 22-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வந்தது. மொத்தம் 7 மையங்களில் இந்த உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் போலீஸ் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் ஈடுபட்ட தேர்வர்கள் ஒவ்வொரு மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. பலமு மையத்தில் அதிகபட்சமாக 4 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் மேலும் பலர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இவர்களில் பலர் ஊக்க மருந்து எடுத்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
போலீஸ் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்று உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சியான பாஜகவோ, ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசின் அலட்சியம்தான் இத்தகைய மரணங்களுக்கு காரணம் என குற்றம்சாட்டி வருவதால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications