ஐயா 200 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டது.. கோர்ட்டில் போலீஸ் சொன்னதை பாருங்க.. கைதானவர் விடுவிப்பு
ராஞ்சி: ஜார்கண்ட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை எலி தின்றதாக போலீசார் கூறியதால் கைதான நபரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்நிலையில் தான் 200 கிலோ கஞ்சாவை எலி தின்றதாக போலீசார் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த வழக்கின் முழு பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலம் ஒர்மாஞ்சி போலீஸ் எல்லைக்குட்ட பகுதியின் வழியாக தேசிய நெடுஞ்சாலை 20 செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பீகாரில் உள்ள பக்தியார்பூரில் தொடங்கி ஜார்கண்ட் வழியாக ஒடிசாவில் உள்ள பனிகோவிலில் முடிவடைகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒர்மாஞ்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ராஞ்சியில் இருந்து ராம்கர் நோக்கி போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெள்ளை நிற போலிரோ கார் வந்தது. காரை போலீசார் மறித்தனர். அப்போது காரை முன்கூட்டியே நிறுத்திய 3 பேர் அதில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர்.
இதில் 2 பேர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில் அவர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த இந்திரஜித் ராய் என்ற அனுர்ஜித் ராய் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் வந்த காரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 200 கிலோ கஞ்சா சிக்கியது. காருடன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஒர்மாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை மீதான விசாரணையும் நடந்து வந்தது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காண்பிக்கும்படி நீதிமன்றம் கூறியது. ஆனால் போலீசாரால் கஞ்சாவை நீதிமன்றத்தில் காண்பிக்க முடியவில்லை.
போலீஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிலோ கஞ்சா ஒர்மாஞ்சி காவல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதனை எலிகள் தின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2024ம் ஆண்டின் காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுக்க சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் மிகவும் முக்கியமானவை. ஏற்கனவே வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு வாதம் பலவீனமாக இருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட விவரம், கார் பறிமுதல், கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட விஷயங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு இருந்தன.
இப்படியான நிலையில் 200 கிலோ கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் உள்ள எலிகள் தின்றுவிட்டதாக முன்வைக்கப்பட்ட வாதம் வழக்கை மொத்தமாக நீர்த்துப்போக செய்தது. இதனால் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட இந்திரஜித் ராயை வழக்கில் இருந்து விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டது.
அதோடு நீதிமன்றம் போலீசாரின் அலட்சியமாக செயல்படுவதாக கூறியது. அரசு மற்றும் போலீஸ் தரப்பில் கஞ்சா பறிமுதல், அதனை சேமித்து வைத்தது உள்ளிட்ட செயல்முறைகளில் நம்பமுடியாத அளவுக்கு இருந்தன என்று நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
ஜார்க்கண்டில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் தின்பதாக நீதிமன்றங்களில் கூறப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இப்படியான சம்பவம் நடந்துள்ள. இதற்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை எலிகள் குடித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications