பாரதி என்ன பாடி என்ன புண்ணியம்... 3 நாளாக சாப்பாடு இல்லாமல் பட்டினியில் வாடி இறந்த பெண்!
Recommended Video

ராஞ்சி: உலகெங்கும் இந்தியாவின் பெருமை எப்படிப் பேசப்பட்டாலும் இந்த ஒரு சம்பவம் நம் அனைவரையும் வெட்கித் தலை குனிய வைக்கிறது. பசியால் வாடி, சாப்பாடு கிடைக்காமல் பட்டினியில் கிடந்து ஒரு பெண் பலியாகியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான் இந்த அவலம். என்ன கொடுமை என்றால் ரேஷன் கார்டுக்காக இந்தப் பெண் தொடர்ந்து அலைந்து வந்துள்ளார். ஆனால் அதிகாரிகளின் அலட்சியம், புறக்கணிப்பு, பாராமுகம் இன்று அவரது உயிரைப் பறித்து விட்டது.

58 வயதாகும் இந்த தாயின் பெயர் சாவித்ரி தேவி. ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த 3 நாட்களாக வீட்டில் சமைக்க பொருள் இல்லை. இதனால் பட்டினியாகவே இருந்துள்ளார். அது நேற்று அவரது உயிரைப் பறித்து விட்டது.
இதுகுறித்து ஷீத்தல் பிரசாத் என்பவர் கூறுகையில், இவர் மிகவும் ஏழ்மையில் வாடி வந்தார். அரசின் இலவசப் பொருட்களைப் பெற ரேஷன் கார்டுக்காக போராடி வந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. இன்று அவரது உயிர் போய் விட்டது. அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றார்.
சாவித்ரியின் மருமகள் சரஸ்வதி தேவி கூறுகையில், பலமுறை மாவட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தும் கூட ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளார். உடல் நிலை மோசமாகி இறந்து விட்டார் என்றார்.

சாவித்ரிக்கு 2 மகன்கள். இவர்களும் கூட ஏழ்மையில்தான் வாடி வருகின்றனர். ஏதாவது கிடைக்கும் வேலையைச் செய்து பிழைத்து வருகின்றனர். 3 நாட்களாக இவர்கள் வேறு பகுதிகளுக்கு வேலைக்காக மனைவியருடன் போய் விட்டனராம். இதனால்தான் யாருமில்லாத நிலையில் உயிரைக் கொடுத்துள்ளார் சாவித்ரி.
இந்தியா வல்லரசு ஆவது ஒருபக்கம் இருக்கட்டும்.. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டையாவது தனது குடிமக்களுக்கு அது உறுதி செய்ய வேண்டும்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.. பாரதி பாடிய பாடல். என்ன புண்ணியம்.. இன்னும் நிலைமை மோசமா இருக்கே!












Click it and Unblock the Notifications