17 அமைச்சர்களுடன் பீகார் முதல்வராக ஜிதன்ராம் மஞ்சி பதவியேற்றார்!
பாட்னா: பீகார் மாநில முதல்வராக ஜிதன்ராம் மஞ்சி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 17 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

ஆனால் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் இதை நிராகரித்திருந்தனர். இருப்பினும் தமது முடிவில் நிதிஷ்குமார் உறுதியாக இருந்ததால் புதிய முதல்வரையும் நிதிஷையே தேர்ந்தெடுக்குமாறு எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சியை புதிய முதல்வராக தேர்வு செய்து ஆளுநரிடம் பரிந்துரைத்தார். இதைத் தொடர்ந்து ஜிதன்ராம் மஞ்சி இன்று அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 17 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களில் இருவர் மட்டும் புதிய முகங்கள். இதர 15 பேரும் நிதிஷ் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களே.
மஞ்சிக்கு மோடி வாழ்த்து
பீகார் முதல்வராக மஞ்சி பதவியேற்ற சில நிமிடங்களிலேயே ட்விட்டரில், நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து ஆதரவளிப்போம் என்று அதில் மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications