மீட்புப் படகைக் கடத்திக் கொண்டு போன காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரும், பிரிவினைவாத தலைவருமான யாசிந் மாலிக், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள பாதிப்புப் பணிகளுக்கு இடையூறு செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் செப்டம்பர் 13ம் தேதி நடந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின்போது மாலிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறுக்கிட்டு அதை கெடுத்துள்ளனர். மேலும் மீட்புப் படகு ஒன்றையும் அவர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர்.
மேலும் ராணுவத்தினர் நடத்தி வந்த மீட்புப் பணிகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆனால் தாங்களே நிவாரணப் பணிகளை வழங்குவதற்காக மீட்புப் படகை கடத்திக் கொண்டு போனதாக மாலிக் தரப்பு கூறுகிறது. மாலிக் தரப்பு படகை கடத்திக் கொண்டு போகும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு மீட்புப் படையின் படகுக்குப் போன அவர்கள் அதில் இருந்த ஊழியர்களை இறங்கிப் போகுமாறும், தாங்களே நிவாரணப் பொருட்களை வழங்குவதாகவும் கூறி படகை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்ற காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.
மேலும் ராணுவத்தினர் ஏற்கனவே படகில் ஏற்றியிருந்த உடல் நலம் குன்றிய பெண் நோயாளிகளையும் அவர்கள் கட்டாயப்படுத்தி கீழே இறக்கி விட்ட செயலும் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு ராணுவத்தின் உதவி தேவையில்லை என்று யாசின் மாலிக் கூறி வருகிறாராம்.
ஏற்கனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவம் ஈடுபடுவதற்கு மாலிக் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தகக்து. சில இடங்களில் ராணுவத்தின் ஹெலிகாப்டர்களையும் இறங்க விடாமல் அவர்கள் தடுத்து அட்டகாசம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்திய ராணுவம் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கடும் அபாயங்களையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக கடுமையாக உழைத்து வருகிறது. இது பிரிவினைவாத தலைவர்களுக்கு கடும் பதட்டத்தைக் கொடுத்துள்ளது. எங்கே மக்கள் ஆதரவை இழந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்ச ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாகவே ராணுவம் மீது ஆங்காங்கே கல்வீசி தாக்கிய சம்பவங்களும் நடந்தன. இவற்றுக்குப் பின்னணியில் பிரிவினைவாத அமைப்பினர் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால் தங்கள் மீது கல்வீச்சு நடந்தது தொடர்பாக ராணுவம் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் மகா பொறுமையுடன் தனது கடமையில் கண்ணாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் வெள்ளம் பாதித்த சமயத்தில் ஒரு பிரிவினைவாத தலைவரும் மக்களுக்கு உதவ வரவில்லை. அரசுத் தரப்பிலேயும் கூட யாரும் வரவில்லை. ஆனால் ராணுவம்தான் ஆரம்பத்திலிருந்தே அபாயகரமான சூழலையும் கூட பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications