ஜார்க்கண்ட் 2 கட்ட சட்டசபை தேர்தல் தேதியை பாஜகவுக்கு முன்பே தெரிவித்ததா இந்திய தேர்தல் ஆணையம்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் தேதியை நேற்றே பாஜகவினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு முன்கூட்டியே அதாவது நேற்றே தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2 அல்லது 3 தொகுதிகள் தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ ஒவ்வொரு நாளும் கூட்டணி கட்சிகள் இணைவதும் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு மிரட்டுவதும் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. கடந்த சில தேர்தல்களாக பாஜக மட்டுமே அதிகமான இடங்களில் போட்டியிட்டு வந்தது. தற்போதைய நிலையில் பாஜகவால் 50 தொகுதிகளிலாவது போட்டியிட முடியுமா? என்ற நிலைமைக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சற்று முன்னர்தான் டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். 81 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும். ஆனால் இந்த தேர்தல் தேதிகளை முன்கூட்டியே பாஜகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் மனோஜ் பாண்டே, இந்திய தேர்தல் ஆணையம் நேற்றே பாஜக தலைவர்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை தெரிவித்துவிட்டது. பாஜகவுடன் இணைந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டால் தேர்தல் எப்படி நேர்மையாக நடக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நிதி உதவியை ரூ.2,500 ஆக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிகப்படுத்தப்பட்ட நிதி உதவி வரும் டிசம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications