டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு சு.சுவாமி துணைவேந்தரா? மாணவர் சங்கம் கொந்தளிப்பு!
டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தராக பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியை நியமனம் செய்வதற்கு அதன் மாணவர் சங்கம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி திடீரென பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் தமக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைக்கும்; மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து வந்தார். ஆனால் பா.ஜ.கவுக்குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாகவும் ஆனால் சுவாமி சில நிபந்தனைகள் விதித்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இது ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் போதைப்பொருள் தடுப்பு படை, எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்கள் அமைக்கப்பட்டு நக்சல்கள், ஜிஹாதிகள், 'எலி'கள்( விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்கு சுவாமி சூட்டிய பெயர்) ஆகியோரை வேட்டையாட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இது மாணவர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.
I think JNU needs an Anti Narcotics Bureau campus branch office to raid dorms and arrest Naxals, jehadis and Elis. BSF camp also
— Subramanian Swamy (@Swamy39) September 24, 2015 இது குறித்து அப்பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் ஷேலா ரஷீத் சோரா வெளியிட்ட அறிக்கையில், சுப்பிரமணியன் சுவாமியை துணைவேந்தராக நியமிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இப்பல்கலைக் கழகத்துக்குள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை புறவாசல் வழியாக நியமிக்க மோடி அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ச்சியாக நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள புகழ்பெற்ற பிலிம் இன்ஸ்டியூட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கஜேந்திரா சவுகானை நியமித்ததற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி ஜஹவலர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சுப்பிரமணியன் சுவாமியை நியமிப்பதால் போராட்டம் வெடிக்கும் என்றும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications