ஸ்பெக்ட்ரம் இறுதி அறிக்கை- ஜேபிசி கூட்டத்தில் வாக்கெடுப்புக்குப் பின் ஏற்பு!பிரதமருக்கு 'க்ளீன்சிட்'
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் இறுதி அறிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இறுதி அறிக்கையில் பிரதமருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் தொடர்பு ஏதும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவானது ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய புதிய ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இதனால் இன்றைய கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோவுக்கு தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால் இதை நிராகரித்திருக்கும் சாக்கோ திட்டமிட்டபடி இன்று கூட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் புதிய ஆவணங்களை பரிசீலிக்க தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்று ஜேபிசி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இறுதி வரைவு அறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இறுதி அறிக்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த இறுதி அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எந்த தொடர்பும் இல்லை என்று 'நிம்மதி' கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications