நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு... அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்
நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் அனல் பறந்தன.
Recommended Video

டெல்லி: சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று அனல்பறக்க விவாதம் நடைபெற்றது.
குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்த போது 2005-ம் ஆண்டு சோராபுதீன் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என குற்றம்சாட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

துஷ்யந்த் தவே
இவ்வழக்கில் மகாராஷ்டிரா அரசு சார்பில் அமித்ஷாவின் வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் நேற்று ஆஜராகினர். மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக துஷ்யந்த் தவே ஆஜரானார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். இது தொடர்பான ஆவணங்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

சால்வே ஆஜராக எதிர்ப்பு
துஷ்யந்த் தவே வாதிடுகையில், சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக ஆஜரானவர் ஹரீஷ் சால்வே. இந்த வழக்கில் அவர் மகராஷ்டிரா அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், நீதிபதி லோயா பிரேத பரிசோதனையின் போது அவரது குடும்பத்தினர் யாரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.

ஹரீஷ் சால்வே எதிர்ப்பு
ஆனால் ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயாவின் மரணத்தை சிலர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். ஏற்கனவே நிறைய கெட்ட பெயரை உருவாக்கிவிட்டீர்கள் என்றார். இதற்கு பதிலடி தந்த தவே, உங்களால்தான் நீதித்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார். இதை ஹரீஷ் சால்வே மிகக் கடுமையாக எதிர்த்த போது, தார்மீக நெறிகள் பற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை என திருப்பி அடித்தார் துஷ்யந்த் தவே. அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், யாருடைய பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வைக்க வேண்டாம் என்றார்.

முகுல் ரோத்தகி ஆஜர்
முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் மகாராஷ்டிரா அரசு சார்பாக ஆஜராகி, மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆஜராகி இருக்கும் துஷ்யந்த் தவே வாதாட அனுமதிக்கக் கூடாது. எதற்காக மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தின் கருத்தை கேட்க வேண்டும் என்றார். இதை நிராகரித்த தவே, நீதிபதி லோயாவின் உறவினர்கள் விசாரணை நடத்த கோருகின்றனர். லோயாவின் மகன் முதலில் விசாரணை கோரினார். பின்னர் நெருக்கடியால் இந்த கோரிக்கையை அவர் எழுப்பவில்லை என்றார்.

தடை விதிக்க எதிர்ப்பு
மேலும் நீதிபதி லோயா மாரடைப்பால்தான் மரணமடைந்தார் எனில் ஏன் நீதி விசாரணையை எதிர்க்க வேண்டும்? என்றார். அப்போது குறுக்கிட்ட ஹரீஷ் சால்வே, நீதிபதி லோயா மரணம் குறித்து ஊடகங்கள் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். இதை துஷ்யந்த் தவே கடுமையாக எதிர்த்தார். சசிதரூர், சிதம்பரம் விவகாரங்களை ஊடகங்கள் நிறையவே விவாதித்துவிட்டன; இந்த தேசம் விவாதங்களை நடத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications