7 வருடமாக ஆதாரத்திற்காக காத்திருந்தேன்.. யாரும் கொண்டுவரவில்லை.. நீதிபதி ஓ.பி.சைனி
2ஜி வழக்கில் 7 வருடமாக யாராவது ஆதாரம் கொடுப்பார்களா என்று காத்து இருந்ததாக நீதிபதி ஓ.பி.சைனி கூறியுள்ளார்.
Recommended Video
டெல்லி: 2ஜி வழக்கில் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
தற்போது இந்த தீர்ப்பில் நீதிபதி ஓ.பி.சைனி பேசிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இத்தனை வருடங்களாக இந்த வழக்கு எப்படி எல்லாம் நடந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு மிகவும் மோசமாக செயல்பட்டு இருப்பதாக அவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். புகார் அளித்து வழக்கு தொடுக்கப்பட்ட வேகத்தில் பாதி வேகம் கூட ஆதாரம் தேடுவதில் காண்பிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
1500 பக்க தீர்ப்பு
2ஜி வழக்கின் 1500 பக்க தீர்ப்பை நீதிபதி ஓ.பி.சைனி இன்று வாசித்தார். அதில் "ராசா மீதான எந்த தவறும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தரப்பு இந்த வழக்கை மிகவும் மோசமாக நடத்தி இருக்கிறது. சரியான பாதையில் இந்த வழக்கு செல்லவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தகவல்கள் பொய்
அவர் தனது தீர்ப்பில் ''ராசாவிற்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் குற்றப்பத்திரிக்கையில் நிறைய பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக இதில் காட்டப்பட்டு இருக்கும் கணக்குகளில் பல பொய்யான தகவல்கள் இருக்கிறது. பொய்யான கணக்குகளின் மூலம் ராசா குற்றவாளி என்று எப்படி நிரூபிப்பது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆதாரம் இருக்கிறதா?
ஓ.பி.சைனி தனது தீர்ப்பில், ''இந்த வழக்கு தொடுப்பதில் சிபிஐ காட்டிய ஆர்வத்தின் அளவிற்கு வழக்கு குறித்த சாட்சிகளை தேடுவதில் ஆர்வம் காட்டப்படவில்லை. இதுவரை இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பவர்களுக்கு எதிராக மிக முக்கிய ஆதாரம் என்று கூறப்படும் அளவிற்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.
கோபமாக பேசினார்
இந்த தீர்ப்பை படிக்கும் போது நீதிபதி ஓ.பி.சைனி ஒரு இடத்தில் கோபம் அடைந்து இருக்கிறார். அப்போது ''நான் கடந்த 7 வருடமாக விடுமுறை நாளில் கூட காலையில் இருந்து மாலை வரை காத்திருந்தேன். யாராவது சரியான ஆதாரம் எடுத்துக் கொண்டு வருவார்களாக என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒருவர் கூட இதுவரை ஆதாரம் எடுத்துக் கொண்டு வரவில்லை. '' என்று குறிப்பிட்டார்.