ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு... தலையெழுத்தை மாற்றுமா தீர்ப்பு?
18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நீதித் துறை வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு இழுபறி படலத்தை எட்டியது இல்லை என்ற சிறப்புப் பெருமையை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்... மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெற்றுவிட்டது.
18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா செப்டம்பர் 20ஆம் தேதி கொடுக்கக் காத்திருக்கும் தீர்ப்புதான், ஜெயலலிதாவின் நிம்மதியை நிலைகுலையச் செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு பதிவான பிறகு, இந்திய நாடாளுமன்றம் ஐந்து தேர்தல்களைக் கடந்துவிட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் மூன்று தேர்தல்களைச் சந்தித்துவிட்டது.
49 வயதில் இருந்த ஜெயலலிதா பொன் விழா கடந்து, மணி விழா கடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கே நான்கு நீதிபதிகள் மாறிவிட்டார்கள். அரசு வழக்கறிஞரும் மாறிவிட்டார்.
உச்ச நீதிமன்றத்துக்கு 16 தலைமை நீதிபதிகள் மாறிவிட்டார்கள். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 12 தலைமை நீதிபதிகள் வந்து போய்விட்டார்கள்.
வழக்கின் விசாரணை அதிகாரிகள் ஓய்வுபெற்று விட்டார்கள். ஆனாலும் வழக்கு நீண்ட நாள் நடந்து முடிந்துள்ளது.
ரூ.2 கோடி சொத்து
முதல்முறை ஆட்சிக்கு வந்தபோது, அதாவது 1991-ம் ஆண்டு கணக்குப்படி ஜெயலலிதாவின் சொத்து 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய்.
செலவுத் தொகை
18 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. இந்த வழக்கை நடத்துவதற்கு அரசும், நீதித் துறையும், ஜெயலலிதா தரப்பும் இதுவரை செலவு செய்திருக்கும் தொகை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகையைவிடக் கூடுதலாக இருக்கும் என்கிறார்கள்.
சசி,இளவரசி, சுதாகரன்
ஜெயலலிதா உடன் நீதிமன்றப்படி ஏறிக்கொண்டு இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு வழக்கு தொடங்குவதற்கு முன் இவர்களுக்கு 17 சொத்துகள் மட்டுமே இருந்தன.
2500 பக்க ஆவணங்கள்
வழக்கு காலம் என்று குறிப்பிடப்படும் 1991-96 காலகட்டத்தில் இது 306 சொத்துகளாக உயர்ந்துள்ளன. இதில் 289 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை" என்று சொல்லி அதற்கு ஆதாரமாக 2,500 பக்க ஆவணங்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா முன்னால் தாக்கல் செய்துள்ளார் அரசு வழக்கறிஞர் பவானிசிங்.
14 கோடி ரூபாய் கட்டிடங்கள்
"வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலை ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஐந்து ஆண்டு காலத்தில் முதல் 27 மாதங்களுக்கு மட்டுமே மாதம் ஒரு ரூபாய் வீதம் 27 ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். ஆனால், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களைக் கட்டி உள்ளார்.
ரூ.2,847 கோடி
அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 90 லட்சம் மதிப்புள்ள 23 கிலோ தங்கம், ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் அவரது தரப்பினர் 32 கம்பெனிகளைப் புதிதாகத் தொடங்கி உள்ளார்கள்" என்று சொன்ன பவானிசிங், "66 கோடி என்பது அன்றைய மதிப்பு. ஆனால், இதன் இன்றைய மதிப்பு 2,847 கோடி ரூபாய்" என்றும் சொல்லி அதிரவைத்துள்ளார்.
வழக்கில் தொடர்புடையவர்கள்
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன தொடர்பு?'' என்று நீதிபதி குன்ஹா கேட்டபோது, ''இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் வீட்டில்தான் இருந்தார்கள். அந்த முகவரியில்தான் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. எனவே, அனைவரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே'' என்றார் பவானி சிங்.
வளர்ப்பு மகனே அல்ல
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரான குமார், இந்த வாதங்களை கடுமையாக மறுத்தார். ''இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் உறவினர்கள் அல்ல. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல.
அரசியல் உள்நோக்கம்
உறவினர்கள் பெயரில் இருந்தால்தானே, அது 'பினாமி சொத்துக்கள்' என்று சொல்ல முடியும்? சொத்துக்களின் மதிப்பு மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. அவருடைய வருமானத்தைக் குறைவாகக் காட்டியுள்ளார்கள். இது அரசியல் நோக்கம் கொண்ட வழக்கு'' என்பது ஜெயலலிதா வழக்கறிஞரின் வாதம்.
தொழில் பார்ட்னர்கள்
சசிகலாவும் ஜெயலலிதாவும் பிசினஸ் பார்ட்னர்கள். இந்த வழக்கு காலகட்டத்துக்கு முன்பே இருவருக்கும் நட்பு இருந்தது. ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக, ஜெயலலிதாவின் பணத்தில் பல கம்பெனிகளில் சசிகலா முதலீடு செய்துள்ளார் என்பது ஏற்புடையது அல்ல என்று சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் வாதிட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்
சசிகலாவுக்கு ஜெயலலிதா பணம் கொடுக்கவும் இல்லை; ஜெயலலிதாவிடம் சசிகலா பணம் வாங்கவும் இல்லை. வழக்கு காலகட்டத்துக்கு முன்பே சசிகலாவுக்கு தொழில், விவசாய வருமானங்கள் உண்டு. என் மனுதாரர் வாங்கிய சொத்துக்கும் ஜெயலலிதா வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கொடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டதற்கும் ஜெயலலிதாவுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை'' என்றார் சசிகலாவின் வழக்கறிஞர்.
சசிகலா குற்றமற்றவர்
தனது கட்சிக்காரர் வசதியானவர், சொத்துக்கள் வாங்கும் தகுதி படைத்தவர். ஆனால், வாங்கிய சொத்துக்களின் மதிப்பை அதிகரித்துக் காண்பித்திருக்கிறார்கள் என்பதே இவரது வாதத்தின் சாராம்சம். தனது தரப்பினரான சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதைவிடவும், ஜெயலலிதா குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவே மணிசங்கர் பெரும் நேரத்தை செலவுசெய்தார்.
ஜெயலலிதா உறவினர்கள் அல்ல
வி.என்.சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனே அல்ல. யாரும் உதவிக்கு இல்லாததால் இளவரசி, போயஸ் கார்டனில் வந்து தங்கி இருந்தார். ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா பணமே வாங்கவில்லை.சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஜெயலலிதாவின் உறவினர்களாக இல்லாத நிலையில், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களையும் சேர்த்து எப்படி வழக்கு தாக்கல் செய்ய முடியும்?'' என்பது ஜெயலலிதா தரப்பு வாதம்.
ஜெயலலிதாவின் ஏஜென்டுகள்
'இந்த மூவருக்கும் எந்த வருமானமும் கிடையாது. இவர்கள் மூவரும் ஜெயலலிதாவின் ஏஜென்ட்கள்'' - என்பது அரசுத் தரப்பு வாதம். உறவினர்கள் யார், பினாமிகள் யார், நண்பர்களின் வருமானம் நம் கணக்கில் சேருமா? இப்படி எண்ணற்ற குழப்பங்களுக்கு செப்டம்பர் 20ல் விடை தெரிந்து விடும்.
விசாரணை அதிகாரி
சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியான நல்லமநாயுடு பணி ஓய்வு பெற்றுவிட்டார்.தமிழகத்தில் இருந்து வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தவர் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன்.
உச்சநீதிமன்றத்தில்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடந்தால் இனி நியாயமாக நடக்காது. எனவே, இதனை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்' என்று தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்துக்குப் போனபோது, இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
தினந்தோறும் விசாரிக்க உத்தரவு
"நியாயமானதும் ஏற்கத்தக்கதுமான பல காரணங்களை மனுதாரர் அன்பழகன் சொல்லி இருக்கிறார். அவரது சந்தேகங்களை நாங்கள் ஏற்கிறோம். பொதுவாக நீதி கிடைக்காது என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் இந்த வழக்கை நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இது வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டிய வழக்குதான்" என்று ஒப்புக்கொண்ட நீதிபதிகள், "இந்த வழக்கை தினந்தோறும் எடுத்து விசாரிக்க வேண்டும்" என்றும் சொன்னார்கள். அப்படிச் சொல்லி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சட்டம் பெரிது
"நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தபோதிலும் உங்களைவிட சட்டம் பெரிது" என்று இதே வழக்கில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா ஆகியோர் எழுதினார்கள்.
விரக்தியடைந்த நீதிபதிகள்
நான் தனியாக கடந்த ஆறு மாதங்களாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதுபோல் உணர்கிறேன்" என்று நீதிபதி பச்சாப்புரே சொல்லும் அளவுக்கு, ‘நீதிபதி பாலகிருஷ்ணா, இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்' என்று உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு, "எனக்கு விசாரணை நடத்த விருப்பம் இல்லை" என்று பாலகிருஷ்ணா விரக்தி அடையும் அளவுக்கு, " இழுத்தடிக்கப்பட்டது.
நொந்து போன ஆச்சார்யா
இனி இந்த நீதிமன்றத்துக்கே வர மாட்டேன்" என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நொந்துகொள்ளும் அளவுக்கு இழுத்தடிக்கப்பட்டன. அரசு வழக்கறிஞராக இப்போது பவானிசிங் இருக்கிறார். இந்த வழக்கை நீதிபதி குன்ஹா விசாரித்து முடித்து தீர்ப்பின் தேதியை குறித்துவிட்டார்.
எண்ணப்படும் நாட்கள்
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவிக்க இன்னும் 12 நாட்கள் உள்ளன. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் இது கிட்டத்தட்ட திருப்புமுனைத் தருணம். இந்த வழக்கின் தீர்ப்பு, ஜெயலலிதா வாழ்க்கையில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, இப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவை நோக்கியே அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.