முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நாளை விடுதலை!
முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்.
கொல்கத்தா: முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரின் மீது ஊழல் புகார் செய்து இருந்தார். இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் கர்ணன் மீது உச்சநீதிமன்றம் சில நாளில் அவதூறு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கர்ணன் தலைமறைவானார். நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார்.
இந்த வழக்கில் இவருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இவரை கண்டுபிடித்து ஜூன் 20ம் தேதி கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைத்தனர்.
இடையில் இவர் பலமுறை பெயில் கேட்டும் நீதிமன்றம் இவருக்கு பெயில் வழங்க மறுத்து வந்தது. உடல்நல குறைவால் இடையில் சில நாட்கள் போலீஸ் கண்காணிப்பில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் இவரது பெயில் கோரிக்கை ஏற்கப்படவேயில்லை.
இந்த நிலையில் தற்போது தண்டனை காலம் முடிந்து நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்












Click it and Unblock the Notifications