ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: பவானி சிங்கை கர்நாடகா நியமிக்கவில்லை– அன்பழகன் வாதம்
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில் "அரசு வழக்கறிஞராக ஆஜராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் வழக்கில் அடிக்கடி குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பேராசிரியர் அன்பழகனுக்கு நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் தொடங்கி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு சார்பில் ஆஜராகும் சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கே.அன்பழகன் சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், "சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது ஜாமீன் வழங்க அரசு சார்பில் ஆட்சேபனை இல்லை என்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கூறினார்.
மேலும் விசாரணை நீதிமன்றத்தில் இவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார். அரசு தரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இல்லை. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போதும் தொடர்ந்து அரசு சார்பில் அவர் ஆஜரானால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜராக அனுபவம் வாய்ந்த மூத்த வக்கீல் ஒருவரை நியமிக்க வேண்டும்''என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (புதன்கிழமை)இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி குமாரசாமியிடம், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி குமாரசாமி, "அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?" அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள்.
ஜெயலலிதா மேல்முறையீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்'' என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அன்பழகன் தரப்பு, "அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, கே.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது''என்று தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதி குமாரசாமி, பவானி சிங்கிடம் கேட்டபோது, ஆமாம், என்னை கர்நாடக அரசு நியமிக்கவில்லை, தமிழக அரசின் ஊழல் ஒழிப்புத்துறை உத்தரவின் பேரிலேயே ஆஜராகியுள்ளேன் என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி குமாரசாமி , "பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்'' என்று கூறினார்.
"பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்'' என்றனர் அன்பழகன் தரப்பினர்.
இந்த வழக்கில் தம்மையும் சேர்த்துக்கொள்ளக் கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதி குமாரசாமி, நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications