உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்.. அக். 3ல் பதவியேற்கிறார்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். அக்டோபர் 3ம் தேதி கோகாய், தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக கோகாயை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதன்படி தற்போது கோகாயை தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்ற பிறகு 3ம் தேதி கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
புரட்சி நீதிபதி
கடந்த ஜனவரி மாதம் நான்கு நீதிபதிகள் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். பிரஸ் மீட் வைத்து தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார்கள் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர். இன்னொருவரன செலமேஸ்வர் சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது நினைவிருக்கலாம். மற்ற இருவரான மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பதவியில் உள்ளனர்.
1954ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி அஸ்ஸாமில் பிறந்தவர் கோகாய். இவரது தந்தை கேஷாப் சந்திர கோகாய், 1982ம் ஆண்டு அஸ்ஸாம் முதல்வராக இருந்தவர். தீர்ப்புகளின்போது தீர்ப்பையும் தாண்டி தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர் கோகாய்.
1978ம் ஆண்டு குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பதிவு செய்து தனது சட்ட வாழ்க்கையை ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி குவஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2010ம் ஆண்டு பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தஇற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் அந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
வடகிழக்கிலிருந்து முதல் தலைமை நீதிபதி
வட கிழக்கு மாநிலத்திலிருந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் நீதிபதி கோகாய்தான். 2019ம் ஆண்டு நவம்பர் வரை கோகாய் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.












Click it and Unblock the Notifications