ஆப்கான்: காபூலில் செய்தியாளர் மீது தாக்குதல்- பெண் பத்திரிகையாளர் தப்பினார்- தாலிபான்கள் அட்டூழியம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தாலிபான்கள் கட்டவிழ்த்துவிட்டனர். காபூல் நகரில் செய்தியாளர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கேமரா உள்ளிட்ட பொருட்களை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாலிபான்களால் தாம் கொல்லப்படுவோம் என்பதால் ஆப்கானிஸ்தானைவிட்டே வெளியேறுவதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் கதறலுடன் கூறியுள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்கள் பிடிக்கு வந்த உடனேயே பல்லாயிரக்கணக்கானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமைச்சர்களாக அரசியல்வாதிகளாக இருந்தவர் வெளிநாடுகளுக்குப் போய் கூலிகளாக வேலைபார்க்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
தலைநகர் காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்த உடனேயே பத்திரிகை அலுவலகங்களில் கெடுபிடி சோதனைகளை நடத்தினர். இன்னொரு பக்கம் அவ்வப்போது சர்வதேச செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தி ஊடகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் பேசி வருகின்றனர்.

காபூலில் தாக்குதல்
ஆனால் தாலிபான்கள் சொல்வதும் செயல்படுவதும் முரணாகவே இருந்து வருகிறது. வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பொதுமக்களை அச்சுறுத்துவது, பத்திரிகையாளர்களைத் தாக்குவது ஆகியவை தாலிபான்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கை. காபூலில் இருந்து ஒளிபரப்பாகும் Tolo டிவி சேனல் செய்தியாளர் Ziar Khan Yaad என்பவர் இன்று காபூல் நகரில் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கப்பட்டார். காபூலில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக தமது டிவி சேனலுக்காக பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாலிபான் கும்பல் அவரை தாக்கியதுடன் கேமரா, மொபைல் போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்து கொண்டது. தாலிபான்களின் இந்த தாக்குதலில் Ziar Khan Yaad கொல்லப்பட்டுவிட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் தாம் உயிருடன் இருக்கிறேன் என்பதுடன் தாலிபான்களால் தாம் தாக்கப்பட்ட சம்பவத்தையும் @ziaryaad என்ற தமது ட்விட்டர் ஐடியில் அவர் பதிவு செய்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர் கதறல்
இதேபோல் Wahida Faizi என்ற பெண் பத்திரிகையாளர் தாம் தாலிபான்களால் கொல்லப்படுவோம் என்பதால் நாட்டைவிட்டு வெளியேறுவதாக கண்ணீருடன் பி.பி.சி.செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக Wahida Faizi கூறுகையில், நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். ஆனால் என்னால் இந்த தேசத்தில் வாழ முடியாது. இங்கேயே நான் இருந்தால் தாலிபான்களால் கொல்லப்படுவேன். அதனால் என் நாட்டைவிட்டு நான் வெளியேறுகிறேன் என காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் நின்று கதறியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
காபூல் நகரம் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது முதலே ஏராளமான பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான Parwiz Aminzada கூறுகையில், தாலிபான்கள் பிடியில் காபூல் சிக்கியது முதலே பத்திரிகையாளர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தாலிபான்கள் நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும் என்றார்.

துருக்கிக்கு வேண்டுகோள்
இதனிடையே அமெரிக்கா படைகள் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்கிற தாலிபான்கள் கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் காபூல் விமான நிலையத்தை கட்டுப்படுத்த துருக்கி ராணுவத்தின் உதவியை தாலிபான்கள் கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications