அவுட் ஆஃப் சிலபஸாக வந்த கல்பனா சோரன்.. பாஜகவுக்கு செக் மேட் வைத்த ஜார்க்கண்ட் சிங்கப்பெண்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் வியூகங்களை தவிடு பொடியாக்கி ஜேஎம்எம் பிரம்மாண்ட வெற்றியுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. இந்த வெற்றிக்கு முதல்வர் ஹேமந்த் சோரனுடன் அவரின் மனைவி கல்பனா சோரன் பக்க பலமாக இருந்து பாஜகவுக்கு அப்செட் கொடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் இடம்பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஜேஎம்எம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது
தொடக்கத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்ததாக தகவல் வெளியானது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலைமை மாறியது. ஜேஎம்எம் கூட்டணி சுமார் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த வெற்றிக்கு ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரின் மனைவி கல்பனா சோரன் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டது.
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மணி லாண்டரிங் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் அந்த மாநிலத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவியது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூட ஜேஎம்எம் சிறப்பாக செயல்படவில்லை. கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் உள்ளிட்டோர் பாஜகவுக்கு சென்றனர்.
கட்சியும், ஆட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டு போய் கொண்டிருக்கும்போது கல்பனா சோரன் அரசியல் களத்தில் குதித்தார். கல்பனா முதல் முதலாக அரசியல் மேடை ஏறி, தன் கணவர் ஹேமந்த் சோரன் கைது பற்றி கண்ணீர் மல்க பேசினார். அது மக்களிடம் அனுதாப அலையை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து அவர் ஏறிய மேடைகளில், பாஜகவின் திட்டத்தை எடுத்துக் கூறிகொண்டே இருந்தார். அரசியலில் இறங்கிய சில மாதங்களிலேயே ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் முக்கிய முகமாக மாறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கந்தே சட்டமன்ற இடைத்தேர்தலில் கல்பனா போட்டியிட்டு வென்றார். தற்போது அதே கந்தே தொகுதியில் கல்பனா மீண்டும் போட்டியிட்டா ர். தன் தொகுதியில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஹேமந்துக்கு பக்கபலமாக இருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு ஐந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். மாலை நேரத்தில் தன்னுடைய சொந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரின் பிரச்சாரத்துக்கு பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜார்க்கண்ட் மாநில மக்களின் நலனுக்காக பாடுபட்ட முதல்வரும் ஹேமந்த் சோரனை பாஜக பழிவாங்கி விட்டது. அவரை சிறையில் அடைத்து ஜார்க்கண்ட் மக்களையும், பழங்குடியினரையும் அவமானப்படுத்தி விட்டது என்பதை கல்பனா மீண்டும் மீண்டும் கூறி வந்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் பழங்குடியின மக்கள் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டு விடும் என்று கூறிய கருத்து பழங்குடி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜேஎம்எம் 10 ஆண்டு கால ஆட்சி அதிருப்தி, ஹேமந்த் மீதான குற்றச்சாட்டு போன்றவை மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் கந்தே தொகுதியில் கல்பனாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் முனியா தேவி கடுமையான போட்டி கொடுத்தார். ஆனால் சுற்றுகள் போக போக கல்பனா சோரன் முன்னிலை வகித்து 16,960 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications