மீண்டும் அரசியல் களத்துக்கு வருகிறார் கல்யாண்சிங்... உ.பி. தேர்தலில் பாஜக பிரசார குழு தலைவராகிறார்
டெல்லி: ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ள பாஜக மூத்த தலைவர் கல்யாண்சிங்கை மீண்டும் அரசியல் களத்தில் இறக்குவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பிரசார குழு தலைவர் பொறுப்பு கல்யாண்சிங்கிடம் வழங்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அஸ்ஸாமில் அபார வெற்றி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதேபோல் உ.பி.யிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதில் அக்கட்சி மும்முரமாக இருந்து வருகிறது. முதல் கட்டமாக யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பது உச்சகட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஸ்மிருதியா, வருணா?
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை முன்னிறுத்த ஒரு தரப்பு முன்னிறுத்துகிறது. ஆனால் பிரியங்காவை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த இருக்கிறது. ஆகையால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண்காந்தியை முன்னிறுத்த மற்றொரு தரப்பும் முனைகிறது.
ஆர்.எஸ்.எஸ். விருப்பம்
ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமோ தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரையே முதல்வர் வேட்பாளராக களமிறக்க விரும்புகிறது. அப்போதுதான் அயோத்தி, மதுரா விவகாரங்களில் தாங்கள் நினைத்ததத செயல்படுத்த முடியும் என்பது ஆர்எஸ்எஸ் கணக்கு.
கல்யாண்சிங் தலைமையில் பிரசாரம்?
இந்த நிலையில் பிரசாரத்தை எப்படி முன்னெடுப்பது? தேர்தல் பிரசாரத்தை யாருடைய தலைமையில் மேற்கொள்வது என்பது குறித்தும் பாஜக தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய ராஜஸ்தான் ஆளுநருமான கல்யாண்சிங் தலைமையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்...
கல்யாண்சிங்குக்கும் எதிர்ப்பு
ஆனால் கல்யாண்சிங், பாஜகவை விட்டு 2 முறை விலகி மீண்டும் கட்சியில் சேர்ந்தவர்; அவருக்கு இத்தகைய வாய்ப்பு தரக் கூடாது என்று அவருக்கு எதிர்த்தரப்பும் கருத்துகளை அடுக்கி வருகின்றனர்.
இதனால் விரைவில் கல்யாண்சிங் தீவிர அரசியல் களத்தில் திரும்பவும் இறங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றன டெல்லி பாஜக வட்டாரங்கள்.