உயிருக்கு ஆபத்து என்ற ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தலைவர் கன்யா குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9ம் தேதி இரவு நடந்த நிகழ்ச்சியின்போது நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவை மாணவர்கள் பாராட்டி பேசியுள்ளனர்.
மாணவர்கள் சங்க தலைவர் கன்யா குமார் அப்சல் குருவை பாராட்டியும், நாட்டிற்கு எதிராகவும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அவரை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது.
இதையடுத்து குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி பிரதிபா ராணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குமாருக்கு ஜாமீன் வழங்க டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மனு மீதான விசாரணை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குமார் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை நாளை சமர்பிக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications