17 நாட்களாகத் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்.. கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆதரவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 17 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை இன்று திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டத்தை வருகின்றனர். அவர்களை திமுக எம்பி கனிமொழி இன்று நேரில் சந்தித்தார்.
விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.
ஏற்கனவே, முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வாக்குறுதி குறித்து மவுனம் காத்து வருவதால், கடந்த மாதம் 16ம் தேதியில் இருந்து 2ம் கட்டப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இந்தப் போராட்டம் இன்று 18வது நாளாக நடைபெற்று வருகிறது.
அடிமைச் சங்கிலி அணிந்து ஊர்வலம்
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் நேற்று உடலில் அடிமைச் சங்கிலியை அணிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.
மருத்துவமனையில் விவசாயிகள்
இதற்கிடையே, போராட்டம் நடத்திய விவசாயிகளில் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடிமைபோல் நடத்தும் அதிகாரிகள்
டெல்லியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள். அதனால் அடிமைச் சங்கிலி போட்டுப் போராட்டம் நடத்தியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
கனிமொழி சந்திப்பு
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி டெல்லி சென்று போராடும் விவசாயிகளை இன்று சந்தித்துப் பேசினார். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான இருவரும் ஆலோசித்துள்ளனர். விவசாயிகள் நடத்திய முதல் கட்ட போராட்டத்தில் கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.