கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலம் மீட்பு: 8 நாள் போராட்டம் வீணாணது
பாகல்கோட்டை: கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரம் தாண்டி சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தகட்டி. இவரது மகன் திம்மண்ணா (6). கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தோட்டத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்துவிட்டான்.

இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வந்தன. தீயணைப்பு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு குழு என பல தரப்பட்ட சுமார் 500 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக போர்வெல் அருகே பெரிய பள்ளம் பொக்லைன் உதவியால் தோண்டப்பட்டது. இறுதியாக சிறுவன் 172 அடி ஆழத்தில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மணல் மூடியதால் அவனை மீட்க முடியவில்லை.
6 நாட்கள் தொடர்ந்த மீட்பு பணிக்கு பிறகு, சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிணவாடை வந்ததும் இந்த சந்தேகத்தை உறுதி செய்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
சடலத்தை மீட்க தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. ஏர்கம்ப்ரைசர் முறையில், சிறுவனின் சடலத்தை இன்று மாலை மீட்பு குழுவினர் வெளியே எடுத்துள்ளனர். ஒரு வாரத்துக்கும் மேலாக போராடியும் கடைசியில் அழுகிய நிலையில் சிறுவனின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது மீட்பு குழுவினருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, சிறுவனின் தந்தை கேட்டுக்கொண்டபடி, பொக்லைனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மாவட்ட நிர்வாகமே மூடி, விவசாயத்திக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications