காவிரி நீர் திறப்பு -கன்னட விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-மத்திய பாஜக அரசு மீது திரும்பும் கோபம்!
மண்டியா: கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படும் நிலையில் கன்னட விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு சொற்பமான நீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா ஏற்க மறுத்தது.

அண்மையில் காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடிநீர் திறந்துவிட பரிந்துரைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் 16,000 கன அடிநீர் கோரப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் 3,000 கன அடி நீரையே திறந்துவிட உத்தரவிட்டது. இதற்கு எதிராக முறையீடு செய்வோம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியிருந்தார்.
மேலும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறக்கவே கூடாது என 2 மாதங்களாக கன்னட விவசாயிகள் மண்டியாவில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். மண்டியா பந்த் முதல் கர்நாடகா பந்த் வரை கன்னட இன அமைப்புகளும் விவசாயிகளும் நடத்தினர். மண்டியாவில் நேற்று இரு சக்கர வாகனப் பேரணியை நடத்தி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர் கன்னட விவசாயிகள். மேலும் தமிழ்நாட்டுக்கான நீர் திறப்பு விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு துரோகம் செய்வதாகவும் கன்னட விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனிடையே கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,984 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 800 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டுக்கு 4,784 கன அடி நீரை கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டுள்ளது.

கர்நாடகா அணைகள் நிலவரம்: காவிரி நீர் திறக்கப்படுகிற கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 101.24 அடி நீர் இருப்பு உள்ளது. கபினி அணையில் 56.46 அடி நீர் இருப்பு உள்ளது. காவிரி நீர் வந்து சேரும் தமிழ்நாட்டின் மேட்டூர் அணை நீர் மட்டம் 43.64 அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications