காங்.அரசின் கம்பி கட்டுற கதை..யுத்தம் நடத்தலையாம்- மேகதாது அணையை நியாயப்படுத்தும் கர்நாடகா டிகேஎஸ்!
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை நியாயப்படுத்தி இருக்கும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், தமிழ்நாட்டுக்கு எதிராக யுத்தம் தொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனையில் மேகதாது அணை புதிய விவகாரமாக இடம்பிடித்திருக்கிறது. கர்நாடகாவும் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை மொத்தம் 12,979 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது. 12,345.40 ஏக்கர் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்படும். ஆனால் நீர்த்தேக்கப்பகுதிகளில் சுமார் 11,845 ஏக்கர் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதி. ஆகையால் இத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர முடியாது. மேகதாது அணையின் நீர் கொள்ளளவும் 67.14 டிஎம்சி. ஏற்கனவே காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகளில் மொத்தம் 104.59 டிஎம்சி நீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேகதாது அணையையும் சேர்த்தால் மொத்தம் 171.73 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகாவே கபளீகரம் செய்துவிடும். இதனால் தமிழ்நாடு வறண்ட நிலமாகிவிடும் என்பதால் மேகதாது அணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மேகதாது கட்டப்பட உள்ள கனகபுரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்தான் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார். இவர்தான் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர். இதே டிகே சிவகுமாதான், மேகதாது அணை கட்டியே தீருவோம் என்ற கோரிக்கையுடன் தேர்தலுக்கு முன்னர் பாதயாத்திரை போனவர். கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போதே மேகதாது அணைக்காக போராட்டம் நடத்தியவர், தற்போது நீர்வளத்துறை அமைச்சர்- துணை முதல்வர் பதவி வகிக்கிற போது சும்மா விடுவாரா என்ன? நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் கூட்டத்திலேயே மேகதாது அணை கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் என்னதான் கூட்டணி கட்சி அரசாக இருந்தாலும் தமிழ்நாட்டு நலனை விட்டுத்தராமல் தமிழ்நாடு அரசு மிக கடுமையாக டிகே சிவகுமாரை எச்சரித்தது. தமிழ்நாட்டுடனான நல்லுறவை உரசிப் பார்க்கிறார் டிகே சிவகுமார் என அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். இதேபோல சட்ட அமைச்சர் ரகுபதியும் டிகே சிவகுமாருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டு எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக டிகே சிவகுமார் கூறிய புதிய கருத்துகள்: மேகதாது அணை கட்ட வலியுறுத்தி 2021-ம் ஆண்டே நாங்கள் பாதயாத்திரை நடத்தினோம். மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லை. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்ட ரூ1,000 கோடி நிதி ஒதுக்கினார். ஆனால் எந்த ஒரு பணியும் தொடங்கப்படவே இல்லை.

தமிழ்நாட்டு மீது வெறுப்புடன் நாம் நடந்து கொள்ளவில்லை; தமிழ்நாட்டுக்கு எதிராக நாங்கள் யுத்தமும் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் கன்னடர்களும் கர்நாடகாவில் தமிழர்களும் வசிக்கின்றனர். ஆகையால் வெறுப்புணர்வு என்பதற்கு எந்த இடமும் இல்லை. மேகதாது அணை என்பது அனைத்து காவிரி பாசன விவசாயிகளுக்கும் பயன் தரக் கூடியது. மேகதாது அணையில் நீர்தேக்கி மின்சாரம் தயாரித்தால் அது எப்படி தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுதான் தெரியவில்லை.
மேகதாதுவில் நீர் தேக்கப்பட்டு அது பெங்களூருவுக்கு விநியோகிக்கப்படும். காவிரி நடுவர் மன்றமே இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் யாரும் எந்த பதற்றமும் அடைய தேவையும் இல்லை. தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் இடையூறு செய்யவில்லை. நாங்கள் தாரளமாக நடந்து கொள்கிறோம். நாம் அண்டை மாநிலங்கள். நமது இரு மாநிலங்களும் இதற்கு முன்னர் போதுமான அளவுக்கு மோதிவிட்டோம்; சட்டப் போராட்டங்களை நடத்தி விட்டோம். எதுவும் யாருக்கும் உதவவில்லை. ஆகையால் அமைதியான முறையில் தீர்வு காண்போம். மேகதாது அணையால் காவிரி பாசன விவசாயிகளுக்கு பாசனத்துக்கும் குடிநீருக்கும் பாதிப்பு இல்லை. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications