கர்நாடக தேர்தல்: கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் - காங். வாக்குறுதி
கர்நாடக தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடக தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக தேர்தலுக்காக ராகுல் காந்தி தற்போது மங்களூர் சென்று இருக்கிறார். இன்றில் இருந்து அவர் கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் செய்வார். தற்போது மங்களூரில் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
மங்களூரில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை பற்றி பேசிய ராகுல் ''இது கர்நாடகா மக்களின் குரலாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம். இதையும் நிறைவேற்றுவோம். இது ஆர்எஸ்எஸ் தயாரிக்கும் சிலருக்கான அறிக்கை இல்லை. இது காங்கிரசின் மக்களுக்கான அறிக்கை'' என்றார்.
இதில் பல கவர்ச்சியான திட்டங்கள் இடம்பெற்று இருக்கிறது. காவிரியில் வீணாகும் தண்ணீரை நன்றாக பயன்படுத்த திட்டம் வகுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.