கர்நாடக தேர்தல்: மோடி நல்ல நடிகர்.. மக்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்.. பிரச்சாரத்தில் சோனியா காட்டம்
கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்தார்.
பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்தார். இதில் பேசிய அவர் மோடி நல்ல ஒரு நடிகர், அவர் மக்களை பொய் சொல்லி பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் இன்று செய்துள்ளார்.
2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் பிஜப்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளார். இதற்காக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர் மோடிக்கு எதிராக நிறைய கருத்துக்களை கூறினார். மிகவும் குறைந்த நேரமே அவர் பிரச்சாரத்தில் பேசினார். பாஜக மக்களுக்கு செய்த மோசமான திட்டங்கள் குறித்து பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் ''மோடி அரசு கர்நாடக விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. நாடு முழுக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் கர்நாடகாவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர் நன்றாக பேசுகிறார். ஆனால் வண்ணவண்ண பேச்சுக்களால் விவசாயிகளின் வயிறு நிறையாது. இந்தியாவிலேயே கர்நாடக விவசாயிகள்தான் மிகவும் குறைவான கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர்'' என்றார்.
மேலும் ''இதுவரை இல்லாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது. மோடி நன்றாக நடிக்கிறார், அவர் மிகவும் சிறந்த நடிகர். மோடி வெளிநாடு சென்று பொய் சொல்கிறார், வரலாற்றை திரிக்கிறார். காங்கிரஸ் தலைவர்களின் பெயரை பயன்படுத்தி அவர் விளம்பரம் தேடுகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக ''ஊழலுக்கு எதிராக மோடி எதுவும் செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு மோடி தேர்தலில் வாய்ப்பளித்துள்ளார். அவர் எதியூரப்பா போன்ற ஊழல் குற்றவாளிகளுக்கு வாய்ப்பளித்துள்ளார். இதை மக்கள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும். கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்'' என்றுள்ளார்.