சொத்துக் குவிப்பு: கர்நாடகாவின் வலை ஜெ.வுக்கு மட்டுமில்ல- சசி, இளவரசி, சுதாகரனுக்கும் தான்!
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டின்போது, ஜெயலலிதா மட்டுமல்ல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் எதிராகவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகால சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது.

ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்ட நிலையில், கூட்டு சதிக்காக, பிற மூன்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும், 4 ஆண்டு சிறையும் வழங்கப்பட்டது.
முன்னதாக, இவ்வழக்கில், ஜெயலலிதா முதல்குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சசிகலா 2வது, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் முறையே 3 மற்றும் 4வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து நால்வருமே பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஹைகோர்ட் ஜாமீன் மறுத்த நிலையில், தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஹைகோர்ட்டில் வழக்கின் மேல்முறையீட்டில், ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக 10 சதவீதத்துக்குள்தான் சொத்து சேர்த்துள்ளார். எனவே, அவர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்த நீதிபதி குமாரசாமி, முதல் குற்றவாளியான ஜெயலலிதா தப்பே செய்யவில்லை என்பதால், பிறர் அவருக்கு எப்படி கூட்டுசதியில் உதவி செய்திருக்க முடியும் என்ற லாஜிக்கை முன்வைத்து, அம்மூவரையும் விடுதலை செய்தார் குமாரசாமி.
சிறை செல்லும்போதும், ஜாமீனின்போதும், விடுதலையின்போதும் என இந்த நால்வருக்கும் எப்போதும் நீதி ஒரே மாதிரிதான் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு உடல் நிலை காரணமாக கூறப்பட்டாலும், மற்ற மூவருக்கும் கூட அதே காரணத்தை பரிசீலித்து கோர்ட் சலுகை கொடுத்துள்ளது.
இந்நிலையில், தற்போது சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா மேல்முறையீடு செய்துள்ள நிலையும், ஜெயலலிதா மட்டுமின்றி எஞ்சிய மூவரையும் சேர்த்தே குற்றவாளிகளாக அறிவிக்க கோரியுள்ளது அரசு தரப்பு. சென்னையில் ஆரம்பித்த நால்வரின் சட்டத்துறை பயணமும் தற்போது பெங்களூர் வழியாக டெல்லி செல்கிறது.












Click it and Unblock the Notifications