தமிழகத்துக்கு இனி காவிரி நீர் திறக்க முடியாது: சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா புதிய மனு!
வறட்சியால் தமிழகத்துக்கு இனி காவிரி நீரை திறக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: தமிழகத்துக்கு இனி காவிரி நீரை திறந்துவிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதனிடையே நடுவர் மன்ற உத்தரவு தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புகள் தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையில் கடந்த 9-ந் தேதியன்று, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு முகாந்திரம் உள்ளது. அத்துடன் டிசம்பர் 15-ந் தேதியன்று அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை கர்நாடக அரசு தினமும் வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு நேற்று இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே போதுமான நீர் இல்லை; ஆகையால் தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது என கூறியுள்ளது.
இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.