ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்கால தடை விதிக்க கர்நாடக நீதிமன்றம் மறுப்பு!
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்குக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தடை விதிக்க மறுப்பு
இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, சொத்து குவிப்பு வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, வழக்கின் விசாரணையை வரும் 20ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
7 நிறுவனங்கள் மனு தாக்கல்
இதனிடையே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய 7 நிறுவனங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளன. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்த 7 நிறுவனங்களும் கர்நாடக நீதிமன்றத்தில் மனுத்ததாக்கல் செய்துள்ளன. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமது சொத்துக்களை விடுவிக்க 7 நிறுவனங்கள் கோரியிருந்தன.