மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ஜெ, சாண்டி, சித்தராமையா, நவீன் பட்நாயக், மமதா
பெங்களூர்: மோடி பதவியேற்பு விழாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஒடிஷா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்றார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா விழாவை புறக்கணித்ததோடு பிரதிநிதியையும் அனுப்பவில்லை.
இந்நிலையில் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருந்ததால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வேலைகள் இருந்ததால் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
அடுத்த முறை டெல்லி செல்லும்போது சாண்டி மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரளா மற்றும் கர்நாடக முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. நவீன் பட்நாயக் சார்பில் ஒடிஷா மாநில நிதி அமைச்சர் பிரதீப் அமத் விழாவில் கலந்து கொண்டார்.