காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு ஆட்சேபனை மனு!
டெல்லி: காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டது காவிரி மேற்பார்வைக் குழு. அக்கூட்டத்திலேயே தமிழக அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது.
இதனிடையே உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை கர்நாடகா மதிக்கவில்லை. காவிரி நீர் குடிநீருக்கு மட்டும்தான் என சட்டசபையில் கர்நாடகா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3,000 கனடி நீர் தமிழகத்துக்கு போதுமானது அல்ல; கர்நாடகாவும் காவிரி நீரை திறந்துவிட விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.