கர்நாடக அரசியலில் பரபரப்பு: அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் திட்டம்
பெங்களூர்: சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மதசார்பற்ற ஜனதாதளம் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவிடமும் இதற்காக ஆதரவு கேட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் செயல்பட்டுவரும் ஊழல் தடுப்பு அமைப்பான லோக்-ஆயுக்தா நீதிபதியான பாஸ்கர் ராவ் மகன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகுவோரிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. நீதிபதியை பதவி விலக கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அரசு இந்த விவகாரத்தில் தலையிட மறுக்கிறது. சிறப்பு விசாரணை குழு இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தும் என்று அறிவித்துவிட்டது.

இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளாகவே, லோக்-ஆயுக்தாவில் ஊழல் நடைபெற்றும் கூட, அதுகுறித்து அரசு வெளியே காட்டிக்கொள்ளாமல், தற்போது முதல்வருக்கு எதிரான ஒரு புகாரை விசாரிக்க தொடங்கும்போதுதான், அரசே நெருக்கடி தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையடுத்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன பாஜக மற்றும் மஜத ஆகிய எதிர்க்கட்சிகள். தற்போது பெல்காமில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், வரும் திங்கள்முதல் பெங்களூர் சட்டசபை கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மஜத சட்டசபை கட்சி குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான பாஜகவிடமும் ஆதரவு கேட்க உள்ளார் குமாரசாமி. இதற்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரை, குமாரசாமி சந்திக்க உள்ளார். இந்த திடீர் நடவடிக்கைகள், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடகாவில், காங்கிரஸ் அரசுக்கு அறுதி பெரும்பான்மை பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications