முரண்! காவிரியை 'மீட்ட தாயை' ஜாமீனில் மீட்க, காவிரிக்காக கர்நாடகாவுக்கு ஆஜராகும் வக்கீல் களமிறக்கம்
பெங்களூர்: காவிரி உரிமையை பெற்றுத்தந்தவாரக அதிமுகவினரால் புகழப்படும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வாதிடுபவர், சாட்சாத், காவிரி பிரச்சினையில் கர்நாடகா தரப்பில் ஆஜராகும் பாலி எஸ்.நாரிமன் என்பதுதான் இந்த வழக்கின் சமீபத்திய மிகப்பெரிய முரண்.
கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் நடுவேயான காவிரி பிரச்சினை என்பது இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை அளவுக்கு வளர்த்துவிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கர்நாடகா சார்பில் பாலி நாரிமனும், தமிழகத்தின் தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதனும் ஆஜராகிவருகின்றனர்.
பெரும்பாலும் காவிரி விவகாரத்தில் நீதிமன்றங்கள் தமிழகத்துக்கு ஆதரவான உத்தரவுகளையே வழங்கி வந்துள்ளன. இதையடுத்து, கர்நாடக எதிர்க்கட்சிகள் பாலிநாரிமனை மாற்றிவிட்டு வேறு வழக்கறிஞரை கர்நாடகாவுக்காக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிகழ்வுகளுக்கு கர்நாடக சட்டசபை சாட்சியாகியுள்ளது. ஆயினும், நாரிமனின் அனுபவம், அவரது திறமையை புறந்தள்ளிவிட முடியாது. அவரால்தான் கர்நாடகாவுக்கு காவிரியில் மிகப்பெரிய அநியாயம் இழைக்கப்படாமல் காக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் சித்தராமையா பேரவையில் சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு கர்நாடக அரசின் நன்மதிப்பை பெற்றவர்தான் இந்த பாலி நாரிமன்.
ஆனால் காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியதாக தெரிவிப்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. சமீபத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சனம் செய்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா என்பதால்தான், கர்நாடக நீதிபதிக்கு கோபம் என்ற ரீதியில் குற்றம்சாட்டினர்.
ஆனால், இப்போதோ, காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்காக வாதாடும் வக்கீலை, ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு ஜாமீன் கேட்டு நியமித்துள்ளது முரணாக தெரிகிறது. இதில் மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சுவாமிகளை ஜெயலலிதா தனது கடந்த கால ஆட்சியின்போது கைது செய்தார். அப்போது தமிழக ஹைகோர்ட்டில் சங்கராச்சாரியருக்காக ராம் ஜெத்மலானி வாதிட்டும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இறுதியாக, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்தபோது நாரிமன்தான் அவருக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்தார். இந்த சென்டிமென்டும் நாரிமன் நியமனத்திற்கு முக்கிய காரணம் என்கின்றனர் அதிமுக வட்டாரத்தில்.
ஆக, காவிரியோ, காஞ்சி சங்கராச்சாரியாரோ, இரு வழக்கிலுமே ஜெயலலிதா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இதுவரை எடுத்து வாதிட்டு வந்தவர்தான் இந்த நாரிமன் என்பது உண்மை.












Click it and Unblock the Notifications