ஜெ. அப்பீல்: ஓவராக இழுத்தடிக்கும் கர்நாடகா... தீர்ப்பைப் படித்துப் பார்க்க டைம் வேண்டும் என்கிறது!
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடிக்க சில நாட்கள் தேவைப்படுவதாக கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அரசு வழக்கறிஞரான ஆச்சார்யா மற்றும் கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் மேல்முறையீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிபார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கர்நாடகா சட்டத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயசந்திரா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தொடர்பான ஆவணங்கள் அதிகமாக இருப்பதால் அதனை படித்து பார்க்க 4, 5 நாட்கள் தேவை. இதனால் ஆவணங்களை படித்து பார்த்த பிறகே இது தொடர்பாக அமைச்சரவையை கூட்டி விவாதிக்க வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும் என்றார்.
இதனால் நாளை மறுநாள் மே 21-ந் தேதியன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications