அம்மா மன்னிச்சிடுங்க, ஐயா மன்னிச்சிடுங்க: திருடிய வீடுகளுக்கு சென்று மன்னிப்பு கேட்கும் திருடன்
பெங்களூர்: கர்நாடகாவில் திருடனாக இருந்த ஒருவர் தற்போது மனம் திருந்தி தான் திருடிய வீடுகளுக்கு சென்று மன்னிப்பு கேட்டு வருகிறார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசவராஜ் நிங்கப்பா பெல கஜ்ஜாரி(46). கடந்த 30 ஆண்டுகளில் 261 வீடுகளில் பணம், நகை உள்ளிட்ட ஏராளமானவற்றை திருடியுள்ளார். இதற்காக அவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.

2010ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திருடுகையில் கையும், களவுமாக சிக்கினார். அந்த பேராசிரியர் அவரை அடித்து நொறுக்காமல் உட்கார வைத்து அறிவுரை வழங்கியதில் மனம் திருந்திவிட்டார் கஜ்ஜாரி.
அதில் இருந்து திருடுவதை விட்டுவிட்டு விவசாய கூலியாக உள்ளார். ஹாவேரி மாவட்டத்தில் மனைவி, 5 குழந்தைகளுடன் வசிக்கும் கஜ்ஜாரி தான் திருடிய வீடுகளுக்கு எல்லாம் நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்.
இதற்காக அவர் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். திருடனாக இருந்த ஒருவர் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications