தமிழகத்தில் மழை பெய்கிறது...காவிரி நீரை தர முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா 'பிடிவாத' மனு
டெல்லி: தமிழகத்தில் மழை பெய்துவருவதால் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்த மனுவில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின்படி தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தப்பட்டிருந்தது.
தமிழக அரசு மனு மீது கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனுவில், காவிரி மேற்பார்வைக்குழுவின் 28.9.2015 கூட்டத்தில் இரு மாநிலங்களின் மழைநீர் அளவு, தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. ஆகையால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாத நிலைமை உள்ளது. தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
ஆகையால் கர்நாடகாவின் தேவைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்து பரிசீலிப்போம். ஆகையால் தமிழகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.