தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 10,000 கன அடிநீர்தான்... சுப்ரீம்கோர்ட்டில் வாதிட கர்நாடகா முடிவு
பெங்களூரு: தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 10,000 கன அடிநீர் மட்டுமே திறக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சீராய்வு மனுவில் வலியுறுத்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது.
மாண்டியா, மைசூர், ஸ்ரீரங்கப்பட்டனா பகுதிகள் போர்க்களமாக காட்சி தருகின்றன. தமிழக எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்பினர் முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மைகளை எரித்து வருகின்றனர்.

நீர் திறப்பு
இந்த உத்தரவு குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று பெங்களூருவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகத்துக்கு நள்ளிரவில் 15,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

சீராய்வு மனு
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவில் மாற்றங்களைக் கொண்டுவர வலியுறுத்தி சீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்யவும் கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

6 நாட்களுக்கு மட்டும்...
கர்நாடகா அரசு திங்கள்கிழமையன்று இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளது. அதில், தமிழகத்துக்கு 6 நாட்களுக்கு 10,000 கன அடி நீரை மட்டுமே திறந்துவிட முடியும் என்று வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகம் கேட்டது இது...
உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது, வறட்சியால் நீர் பற்றாக்குறையாக இருப்பதாக கர்நாடகா அரசு வாதிட்டது. தமிழக அரசு தரப்பில் 33 டிஎம்சி நீர் மட்டுமே ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ந்- தேதி வரை மொத்தம் 94 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க வேண்டும்; வறட்சி, பற்றாக்குறை காலத்திலும் கூட நடுவர் மன்ற தீர்ப்பின்படி குறைந்தது 68 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications