காவிரி: உடனடியாக முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மோடிக்கு சித்தராமையா அவசர கடிதம்
பெங்களூர்: காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அந்த நதி சம்மந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் குறைந்த அளவே நீருள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அம்மாநிலம் கூறுகிறது. இந்நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவை மீற முடியாத கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

இந்நிலையில்தான், பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூர் நகரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தனது கடிதத்தில் சித்தராமையா சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தொடர்ந்தால், பெங்களூர் நகரில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, காவிரி பாசன பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். மேட்டூர் அணையிலுள்ள தண்ணீர் தமிழகத்தின் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது.
கடந்த 6ம் தேதி கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்றுதான் பாஜக பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால், அரசியல் சாசனத்தை செயல்படுத்தும் பொறுப்பிலுள்ள முதல்வரான நான், கோர்ட் உத்தரவை மதித்து தண்ணீர் திறந்துள்ளேன்.
இவ்வாறு தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகாவில் பதற்றத்தையே அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு காவிரியால் பயன்பெறும் மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு உடனே நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டின் ஒற்றுமையை காக்கும் பொறுப்பில் இருக்கும் பிரதமரான நீங்கள் இதை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு சித்தராமையா கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications