கார்த்தி சிதம்பரத்தின் தந்திரங்களை பார்த்து விழி பிதுங்கும் சிபிஐ!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் அதிகாரிகளின் கேள்விகளுக்கு தந்திரமாக அளிக்கும் பதில் அவர்களை விழி பிதுங்க வைத்துள்ளது.
Recommended Video

டெல்லி : கடந்த சில நாட்களாகவே சிபிஐக்கு போதாத காலமாகவே இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம். அதிகாரிகளின் கேள்விகளை தவிர்க்கும் விதமாக சட்ட விவாதம் நடத்தும் கார்த்தியின் நடவடிக்கைகளும், பயன்படுத்தும் தந்திரங்களும் அதிகாரிகளின் பொறுமையை சோதித்து பார்ப்பதாகவே இருக்கிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த 28ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அவகாசம் நேற்றோடு முடிந்த நிலையில் சிபிஐ நீதிமன்றத்தை நாடி மேலும் 3 நாட்கள் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டுள்ளது. விசாரணையின் போது கேட்கும் கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம், வாக்குவாதத்தையும், கடுமையான வார்த்தைகளையுமே பதிலாக வைக்கிறார்.

உண்மைகளை மறைக்க முயலும் கார்த்தி
கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் நிச்சயம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்று சொன்னாலும், கேள்விகளை தவிர்ப்பதற்காக கார்த்தி பயன்படுத்தும் தந்திரங்கள் அவர்களை சற்று எரிச்சலடைய வைத்துள்ளது. உண்மையை மறைப்பதற்காக கார்த்தி இந்த தந்திரங்களை பயன்படுத்துவதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி என்ன தந்திரங்களை கார்த்தி சிதம்பரம் பயன்படுத்தினார் என கேட்கிறீர்களா?

அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கடந்த சனிக்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு பதிலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு சரி அடுத்தது என்ன என்று கேட்டுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து அதிகாரிகள் கார்த்தியை இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை நடத்துவதற்காக மும்பை அழைத்து செல்வதாகக் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, நான் ஏன் மும்பை வர வேண்டும். என்னால் மும்பைக்கெல்லாம் வர முடியாது, வேண்டுமானால் இந்திராணியை இங்கே அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அதிகாரிகள் சிரித்துக் கொண்டே அப்படி கூற முடியாது என்று கார்த்தி சிதம்பரத்திற்கு பதில் அளித்துள்ளனர்.

பாஸ்வேர்ட் கூற மறுப்பு
அடுத்ததாக கார்த்தி சிதம்பரத்தின் தொலைபேசியானது சிபிஐ அதிகாரிகள் வசம் உள்ளது. அதில் உள்ள லாக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் கார்த்தியிடம் பாஸ்வேர்ட் கேட்டுள்ளனர், பாஸ்வேர்ட் சொல்ல மறுத்ததோடு, நரகத்திற்கு போங்கள் என்று ஆவேசமாக அதிகாரிகளை பார்த்து கத்தியுள்ளார். அதிகாரிகளின் எந்த கேள்விக்கும் கார்த்தி ஒத்துழைப்பு அளிப்பதில்லை. தங்களின் கேள்விகளை தடுக்கும் விதமாக சட்ட விவாதங்களை கார்த்தி செய்வதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஸ்விக்கி பதிவிறக்கம் செய்யுங்கள்
சிபிஐ காவலில் கார்த்தி முதன்முதலில் ஒப்படைக்கப்பட்ட போது, கார்த்தி தனக்கு வீட்டில் இருந்து சமைத்த உணவு கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை நீதிம்ன்றம் நிராகரித்துவிட்டது, இதனைத் தொடர்ந்து சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணை அதிகாரியிடம் உங்கள் போனில் ஸ்விக்கி அல்லது ஜோமோடோ செயலி இருக்கிறதா, நான் அதில் உணவை ஆர்டர் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதிகாரி தன்னுடைய போனில் அந்த செயலிகள் எல்லாம் இல்லை என்று பதில் தர, அவற்றை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார் கார்த்தி.

எதிர் கேள்வி கேட்ட கார்த்தி சிதம்பரம்
இதன் உச்சமாக நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் தமிழில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது விசாரணை அதிகாரி கார்த்தி சிதம்பரத்தை ஆங்கிலத்தில் பேசுமாறு கூறியுள்ளார். அதற்கு கார்த்தி நீங்களும் என் முன்னால் ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அதிகாரி "நீ எங்களின் காவலில் இருக்கிறாய், அதனால் நாங்கள் சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டும்" என்று பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications